வழிபாடு

பக்தர் ஒருவர் தீக்குண்டத்தில் இறங்கிய போது எடுத்த படம்.

திரவுபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா: தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2023-05-24 13:44 IST   |   Update On 2023-05-24 13:44:00 IST
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
  • படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வீதி உலாவும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். இதை தொடர்ந்து கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதிஉலா நடந்து வருகிறது. கடந்த 19-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காலையில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

மாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News