வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்ததையும், யாக சாலை பூஜை நடந்ததையும் படத்தில் காணலாம்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2023-06-27 13:24 IST   |   Update On 2023-06-27 13:24:00 IST
  • யாகசாலை பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார்.
  • இன்று 3-ம் கால வேள்வி, மகா தீபாராதனை நடைபெறுகிறது.

திண்டுக்கல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நாளை (புதன்கிழமை) காலை 9.35 மணி முதல் 10.35 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

நேற்று காலை விஸ்வரூப சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, ரட்ஷா பந்தளம், முதற்கால வேள்வி நடந்தது. மாலையில் 2-ம் கால வேள்வி, திவ்யபிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. யாகசாலை பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 3-ம் கால வேள்வி, மகா தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் சவுந்தரராஜ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருமஞ்சனம், 4-ம் கால வேள்வி, மூலமந்திரம், காயத்ரி மந்திரம், சயனாதி வாசம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை பட்டாச்சாரியார்கள் ரமேஷ், வெங்கட்ராம், ஜெகநாதன் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கூட்டுறவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவி கவிதா சின்னத்தம்பி, அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் முருகன், பட்டாச்சாரியார்கள் ரமேஷ். ராமமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News