வழிபாடு

தேர்பவனி நடந்த போது எடுத்த படம்.

முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

Published On 2023-02-08 04:05 GMT   |   Update On 2023-02-08 04:05 GMT
  • திரளானவர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தினர்.
  • இன்று திருப்பலி, அசன விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து வாண வேடிக்கை, புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தினர்.

10-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும், கொடியிறக்கமும் நடைபெற்றது. விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு வடக்கூர் புனித அந்தோணியார் கெபியில் ஜெபமாலை, திருப்பலி மற்றும் அசன விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா அருள் செபஸ்தியான், பொருளாளர் மகான் அந்தோணி, செயலாளர் லியோ ஜெப நீலன், பங்கு தந்தை டென்ஸில் ராஜா, நிர்வாக பொறுப்பு தந்தை அருள்மணி, அருட்சகோதரிகள், முத்துலாபுரம் தூய செபஸ்தியார் திருத்தல நிர்வாகக்குழு இறை மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News