வழிபாடு

கரிசல்பட்டியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா

Published On 2023-03-04 03:48 GMT   |   Update On 2023-03-04 03:48 GMT
  • அனைத்து வீடுகளுக்கும் நார்ஷா எனும் இனிப்பு வழங்கப்பட்டது.
  • இந்துக்களுக்கு விபூதி பிரசாதமும், முஸ்லிம்களுக்கு சர்க்கரையும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஆண்டு தோறும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தக்கூடிய மத நல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா ஷாபான் 1-ம் பிறையில் கொடி ஏற்றம் நடைபெற்று, ஷாபான் 10-ம் பிறையில் சந்தனக்கூடு நகர் வலம் வந்து ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்கா வந்தடைந்தது.

கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் அனைத்து மக்களும் இணைந்து, வீடுகளில் சர்க்கரை, பேரிச்சம்பழம், பழங்கள் வாங்கி தினமும் பாத்தியா ஓதப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் நார்ஷா எனும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் இந்துக்களுக்கு விபூதி பிரசாதமும், முஸ்லிம்களுக்கு சர்க்கரையும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இது கரிசல்பட்டி, கே.புதுப்பட்டி, கரியாம்பட்டி என 3 கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் இணைந்து நடத்தும் விழாவாகும்.

இந்த விழாவிற்கு கரிசல்பட்டி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது முகமது, ஊராட்சி தலைவர் ஷாஜகான், நாட்டாண்மை அபி முகமது தலைமை தாங்கினர். விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு, அனைத்து மக்களும் இணைந்து தூக்கி நகர் வலம் வந்தனர். சந்தனக்கூடு முக்கிய வீதிகளில் வலம் வந்து பின்னர் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்காவிற்கு வந்தது. அங்கு சந்தனக்கூட்டில் வைக்கப்படிருந்த சந்தனக்குடத்திலிருந்து சந்தனம் எடுத்து பாத்தியா ஓதப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு சாதி, மத பேதமின்றி நடத்தக்கூடிய மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News