வழிபாடு

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2022-08-07 08:19 GMT   |   Update On 2022-08-07 08:19 GMT
  • இந்த கோவில் உள்ள பிரகாரத்தில் 108 சுற்றுகள் சுற்றினால் வேண்டுதல் நிறைவேறும்.
  • சிலர் பக்தர்கள் நொண்டியடித்தும், முழங்கால் இட்டும் 11 முறை சுற்றினர்.

தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி-அம்பாள் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஆடித்தபசு திருவிழாவின்போது சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பிரகாரத்தில் 108 சுற்றுகள் சுற்றினால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதன்படி கொடியேற்றப்பட்டதில் இருந்து நேற்று வரை பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 108 முறை கோவில் உள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். சிலர் பக்தர்கள் நொண்டியடித்தும், முழங்கால் இட்டும் 11 முறை சுற்றினர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான திருவிழா 11-ம் நாளான, வருகிற புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News