வழிபாடு

தாழைமடலாயி பிடாரி அம்மன் கோவிலில் 250 ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா

Published On 2022-07-09 04:50 GMT   |   Update On 2022-07-09 04:50 GMT
  • ஒவ்வொரு கிராமத்திற்கு தேர் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர்.

தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியில் தாழைமடலாயி பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 4-தலைமுறைகளுக்கு முன்பு பிடாரி அம்மன் தேர்த்திருவிழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் தேர்த்திருவிழா நடத்த தோளூர்பட்டி, உப்பாத்துபள்ளம், முதலிப்பட்டி, எலந்தமடைப்புதூர், தொட்டியப்பட்டி, கீழகார்த்திகைப்பட்டி, மேலகார்த்திகைப்பட்டி, பாலசமுத்திரம், கணேசபுரம் ஆகிய 9 கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் சுமார் 25-கிலோ மீட்டர் தூரம் கொண்ட தேர் செல்லும் வழியில் உள்ள எல்லைகளை கண்டுபிடித்து எல்லை கல் நடும் நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் காப்பு கட்டுதலுடன் திருவிழாவை தொடங்கினர். இதையொட்டி கடந்த 5-ந்தேதி நள்ளிரவு தோளூர்பட்டியில் உள்ள தாழைமடலாயிபிடாரியம்மன் கோவிலில் தேர் தலையலங்காரம் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு கிராமத்திற்கு தேர் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் உப்பாத்துபள்ளம் கிராமத்திற்கு தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர். பின்னர் முதலிப்பட்டி வழியாக நேற்று மல்லிகை தோட்டம் மற்றும் கரும்பு தோட்டத்தின் வழியாக கீழ கார்த்திகைப்பட்டியை வந்தடைந்தது. இதை தொடர்ந்து பாலசமுத்திரம், கணேசபுரம் உள்ளிட்ட கிராமங்களில் எல்லை உடைக்கும் நிகழ்ச்சியும், எரி காவல் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இன்னும் ஒரு வார காலம் நடைபெற உள்ளது.. இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை 9 கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும், கோவில் சாமியாடிகளும் செய்து வருகின்றனர். சுமார் 250 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News