வழிபாடு

உற்சவ மூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-12-17 12:19 IST   |   Update On 2022-12-17 12:19:00 IST
  • பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.
  • பக்தர்கள் திருப்பாவை, பக்தி சொற்பொழிவு நடத்தினர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தீபத்திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் தற்போது திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

ஆரணி நகரில் சார்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை திருப்பாவை உற்சவத்துடன் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் அமர்ந்து திருப்பாவை, பக்தி சொற்பொழிவு நடத்தினர்.

இதேபோல் தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும், கொசப்பாளையம் பகுதியில் உள்ள கில்லா சீனிவாச பெருமாள் கோவிலிலும், அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும், ஆரணி - ஆற்காடு சாலை இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் மார்கழி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட சீனிவாச பெருமாள் கோவில், சிவன் கோவில், காந்திதெரு வாசவி மகாலில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரசக்தி விநாயகர் கோவில், சக்தி விநாயகர் கோவில், வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் முத்தாலம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில், அய்யப்பசேவா சங்கம், மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

Tags:    

Similar News