திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து 12-ந்தேதி புறப்படுகிறது
- கடந்த 2 ஆண்டுகள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
- திருவாபரண ஊர்வலத்தின் போது 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கேரள மாநிலம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யா.எஸ் அய்யர் தலைமை தாங்கினார். திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதுகர் மகாஜன், உதவி கலெக்டர் கோபகுமார், ராஜ குடும்ப பிரதிநிதி திருக்கேட்ட நாள் ராஜராஜ வர்மா, பந்தளம் கொட்டாரம் நிர்வாக குழு தலைவர் சசிகுமார வர்மா, செயலாளர் நாராயண வர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மகர விளக்கையொட்டி பந்தளத்தில் இருந்து 12-ந் தேதி திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருவாபரண ஊர்வலத்தின் போது 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுடன் மருத்துவ குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடன் செல்வார்கள். ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.