வழிபாடு

சென்னை, ராஜா அண்ணாமலை புரம் வடசபரிமலை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2024-03-28 03:26 GMT   |   Update On 2024-03-28 03:26 GMT
  • 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் எழுந்தருளி உள்ளார்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

சென்னை:

வடசபரி என்று அழைக்கப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (ஆர்.ஏ.புரம்) 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் சாமி எழுந்தருளி உள்ளார். இறைவனின் உத்தரவுப்படி புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், நவக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கும் புதுபொலிவுடன் கோபுரங்கள் கட்டி பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 24-ந்தேதி விநாயகர் பூஜை, முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 25-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாக பூஜை, 26-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7.15 மணி அளவில் 6-ம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து 10.45 மணிக்கு சபரிமலையில் இருந்து வந்திருந்த மோகன் தந்திரி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கே.பிச்சை குருக்கள் தலைமையில் கோபுர கலசத்துக்கும், அதை தொடர்ந்து மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

 இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஐயப்ப சாமி எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

விழா நாட்களில் வேதபாராயணம், தேவார இன்னிசையும், கலைநிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சாமி கோவில் அறக்கட்டளை அறங்காவலரும், கும்பாபிஷேக திருப்பணிக்குழு தலைவருமான ஏ.சி.முத்தையா மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News