வழிபாடு

உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்த போது எடுத்தபடம்.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி அருணாசலேஸ்வரர் கிரிவலம்

Published On 2022-12-09 07:57 GMT   |   Update On 2022-12-09 07:57 GMT
  • இந்த நிகழ்வு ஆண்டிற்கு 2 முறை மட்டுமே நடைபெறும்.
  • பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 6-ந் தேதி மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 8.35 மணியளவில் தொடங்கி நேற்று காலை 9.33 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை வரை ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் பக்தர்களை போன்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிகழ்வு ஆண்டிற்கு 2 முறை மட்டுமே நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து 2-வது நாளிலும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடக்கும் திருவூடல் முடிந்ததும் பக்தர்களை போன்று அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருவார்.

அதன்படி நேற்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தார். அருணாசலேஸ்வரருடன், பராசக்தி அம்மனும், சின்னக்கடை வீதியில் உள்ள துர்கை அம்மனும், அடி அண்ணாமலை கிராமத்தில் ஆதி அருணாசலேஸ்வரரும் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அருணாசலேஸ்வரர் கிரிவலத்தையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் நேற்று பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவை தொடர்ந்து அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. நேற்று இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடந்தது. அப்போது பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து அய்யங்குளத்திற்கு ஊர்வலமாக வந்து தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (சனிக்கிழமை) சண்டிகேஸ்வரர் வீதிஉலாவும் நடக்கிறது.

Tags:    

Similar News