- குமரியாக வீற்றிருப்பதால் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றாள்.
- இக்கோவில் தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
கன்னியாகுமரி பகவதி அன்னையின் ஒளிமிகுந்த மூக்குத்தி யோக சக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. சிவபெருமானை மணம்புரிய விரும்பி கன்னியாகுமரியில் பகவதி அம்மன் தவமிருந்தாள். ஆனால் சிவன் வராமல் போகவே கோபத்தில் இருந்த பகவதி தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு பாணாசுரன் வற்புறுத்தினான்.
இதனால் மேலும் கோபமாகி அசுரனை அழித்தாள் பகவதி. தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து, தனது கோப சக்தியை எல்லாம் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தியில் இறக்கி சாந்தமானாள். அவள் குமரியாகவே அங்கு வீற்றிருப்பதால் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றாள்.
இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணி வந்த கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதனாலேயே கோவிலின் கடற்கரை நோக்கிய முன் கோபுரவாயிலான கிழக்கு வாயில் மூடப்பட்டு வடக்குப்புற வாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.