திருப்பதி கோவிலில் குவியும் பக்தர்கள்: வி.ஐ.பி. தரிசனம் ரத்து
- 4 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோடை விடுமுறை காரணாமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன. இன்று காலை வைகுந்தம் காம்ளக்சில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், நேரம் ஒதுக்கிடு முறையில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடி இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது.
மேலும் தரிசன நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் வழங்கும் விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் செயல்அதிகாரி தர்மா அறிவித்துள்ளார்.
திருப்பதியில் நேற்று 66,820 பேர் தரிசனம் செய்தனர். 36,905 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.29 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.