வழிபாடு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

Published On 2022-07-07 03:07 GMT   |   Update On 2022-07-07 03:07 GMT
  • சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.
  • இன்று பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலாவுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவு பெறுகிறது.

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாளில் தான், மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினசரி பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தினமும் காலை, மாலை சாமி வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

தேர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நிலையை வந்தடைந்தது. பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் ஊர்வலமாக கோவிலுக்குள் சென்று, ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

பின்னர், ஆனி திருமஞ்சன விழா நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணிக்கு கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

பின்னர், 3.45 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர் நடன பந்தலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! சிவ, சிவ.. ஓம் நமசிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 4 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News