வழிபாடு
மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டம்

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-05-26 04:07 GMT   |   Update On 2022-05-26 04:07 GMT
மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 10-ம் தேதி காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்ற மகா தீபாராதனைகள் நடந்து வந்தது.

கடந்த 17-ம் தேதி ரிஷப வாகனம், 18-ம் தேதி பூத வாகனம், 19-ம் தேதி குதிரை வாகனம், 20-ம் தேதி காமதேனு வாகனம், 21-ம் தேதி யானை வாகனம், 22-ம் தேதி ரிஷப வாகனம், 23-ம் தேதி முத்துப் பல்லக்கு, 24-ம் தேதி வெட்டு குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில், தினமும் இரவில் சாமி வீதியுலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா, இன்று காலை 9 மணிக்கு நடந்தது. அம்மனுக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்க சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள ஊர் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேர்த் திருவிழாவை துவக்கி வைத்தனர்.

தேரானது, மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்று வந்து, பின்னர் தன் நிலையை வந்தடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News