வழிபாடு
கருட வாகனத்தில் உற்சவர் நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரைநாச்சியாரும் உலா வந்ததை காணலாம்.

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழா கருட சேவை

Published On 2022-03-24 09:14 IST   |   Update On 2022-03-24 09:14:00 IST
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழாவில் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
நவதிருப்பதிகளில் 7-வது தலமான தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனித்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் தோளுக்கினியான், சிம்மம், அனுமார், சேஷ வாகனங்களில் திருவீதி உலா வருதல் நடந்தது.

தொடர்ந்து 5-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு கருடசேவை நடந்தது. காலையில் பல்லக்கில் வீதி உலாவும், மாலையில் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. இரவு 10 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து சாமிதரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தக்கார் அஜீத், செயல் அலுவலர் இசக்கியப்பன், ஸ்தலத்தார்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நாளை மறுநாள்(சனிக்கிழமை) தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

Similar News