வழிபாடு
சீனிவாச பெருமாள்

திருவாரூரில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் மும்முரம்

Published On 2022-02-17 08:38 GMT   |   Update On 2022-02-17 08:38 GMT
திருவாரூரில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
சைவ சமய மரபில் பெரியகோவில் என்று அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். இக்கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது. மக்கள் கடலில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால் மக்கள் இத்தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.

இந்த தேர் 36 அடி உயரத்தில் 5 அடுக்கு கட்டு மானங்களை கொண்ட தேர் பீடத்தில், 60 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு ஆக கூடுதல் 96 அடி உயரத்தில் சுமார் 450 டன் எடையில் தேர் கம்பீரமாக அசைந்து வருவதை பார்க்க நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர்.

இந்த தேர் சிம்மாசனம், பத்மாசனம் என 5 வகை ஆசனங்களை கொண்டு 5 அடுக்குகளாக 36 அடி உயரத்தில் அழகிய தேராக கட்டப்பட்டுள்ளது.

இதன்மேல் 60 அடி உயரத்தில் மூங்கில் மற்றும் பனமர துண்டுகளை கொண்டு கோபுர வேலைப்பாடுகளும், அதனை தொடர்ந்து வண்ண துணிகளை கொண்டு அலங்கரம் செய்யப்பட்டு 96 அடி உயரத்தில் 450 டன் எடையுடன் கூடிய தேர் அசைந்து வருவது பார்ப்பவர் கண்களுக்கு பரவசம் தரும். குறிப்பாக வீதி முனைகளில் தேர் திரும்பும் அழகு காணக் கிடைக்காதது.

ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின்போது இறுதி நிகழ்ச்சியாக இத்தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு 15.3.22-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.

தேரோட்டத்தினை முன்னிட்டு தேர் கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் நிலையாக அமைக்கப்பட்டுள்ள 5 அடுக்குகளை கொண்ட பீடத்தின் மீது மூங்கில் மற்றும் பனமர துண்டுகளை கொண்டு தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக வேதாரண்யம் உள்ளிட்ட காடுகளில் இருந்து மூங்கில் மரங்கள் கொண்டு வரப்பட்டு கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கட்டுமானம் முடிந்தவுடன் அழகிய வண்ணங்களால் ஆன திரைசீலைகள் கொண்டு தேர் அலங்கரிக்கப்படும்.

அலங்கார வேலைகள் முடிந்தவுடன் தேரோட்டத்திற்கு 3 நாட்கள் முன்னதாக கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருள்வார்.

தியாகராஜர் தேருக்கு வந்தவுடன் பக்தர்கள் திரளாக வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு செல்வர்.

Tags:    

Similar News