வழிபாடு
பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் கோவில் வளாகம்.

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த தைப்பூசம் திருவிழா

Published On 2022-01-18 06:18 GMT   |   Update On 2022-01-18 08:15 GMT
இன்று காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து விடலை கோவில் பிள்ளையார் சன்னதி வரை வந்து கோபுரத்தை நோக்கி கும்பிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் என அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதிப்படி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த 14-ந்தேதியில் இருந்து இன்று வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 5 நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை என்பதால் லட்சக்கணக்கான பக்தர் கடந்த 13-ந்தேதியே கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

வழக்கமாக தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தம் வழிபாடு நடத்துவது வழக்கம். இன்று காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து விடலை கோவில் பிள்ளையார் சன்னதி வரை வந்து கோபுரத்தை நோக்கி கும்பிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் கோயில் வளாகத்துக்கு வந்து விடாமல் இருப்பதற்காக கோவில் நுழைவு வாயில் டோல் கேட்டில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News