வழிபாடு
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை மகரவிளக்கு சீசன் நிறைவாக பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி 20-ந் தேதி சாமி தரிசனம்

Published On 2022-01-18 04:05 GMT   |   Update On 2022-01-18 04:05 GMT
மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவையொட்டி, 20-ந் தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இங்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 14-ந் தேதி புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகர ஜோதியை தரிசித்தனர்.

இந்த நிலையில் தற்போதும் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு தடை உத்தரவுகளை பின்பற்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார்கள். நடப்பு சீசனை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவையொட்டி, 20-ந் தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்பத்தின் பிரதிநிதி சங்கர் வர்மா சாமி தரிசனம் செய்வார். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதைத்தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் பந்தளம் ராஜ குடும்ப வாரிசு சங்கர் வர்மா தலைமையில் மீண்டும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
Tags:    

Similar News