வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா நாளை நடக்கிறது

Published On 2022-01-17 10:35 IST   |   Update On 2022-01-17 10:35:00 IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள், கால் நாட்டு விழா நிகழ்ச்சிகள் பக்தர்களின்றி நடைபெறும்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு பந்தல் கால் நாட்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு நிறை புத்தரிசி வழிபாடு, 6.30 மணிக்கு தீபாராதனை, 7.30 முதல் 8.15 மணிக்குள் பந்தல் கால் நாட்டு விழா ஆகியவை நடக்கிறது.

இதுகுறித்து கோவில் ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார் கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 18- ந் தேதி வரை வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள், கால் நாட்டு விழா நிகழ்ச்சிகள் பக்தர்களின்றி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News