ஆன்மிகம்
விநாயகர், சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்தபோது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் 2-ம் நாள் தீபத்திருவிழா: கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உலா

Published On 2021-11-12 08:51 GMT   |   Update On 2021-11-12 08:51 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2-ம் நாள் தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அன்று காலை மற்றும் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், உண்ணாமலை சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா நடைபெற்றது.

தொடர்ந்து 2-ம் நாள் விழாவான நேற்று காலை கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பின்னர் மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் கொண்டு வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.

இதற்கிடையில் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கையில் குடையுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு சுமார் 8 மணியவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News