ஆன்மிகம்
லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேரோட்டம்

Published On 2019-03-23 03:36 GMT   |   Update On 2019-03-23 03:36 GMT
நங்கவள்ளி லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில் ஆகும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நாள்தோறும் அன்னவாகனம், சிம்மவாகனம், சேஷவாகனம், அனுமந்தவாகனம், யானைவாகனம், கருடவாகனம், ரிஷபவாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

நேற்று லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரசாமி சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரில் அமர்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு இருந்து தேரோட்டம் தொடங்கி முதலில் விநாயகர் தேரும் 2-வது தேரில் சோமேஸ்வரரும், சவுந்தரவல்லி அம்பாளும், 3-வது பெரிய தேரில் லட்சுமி நரசிம்மசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றது. தேர் புறப்பட்டு தாரமங்கலம் பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டது.

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

இன்று (சனிக்கிழமை) தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து பஸ்நிலையம் வரையும், நாளை (ஞாயிற்றுக்் கிழமை) பஸ்நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்பு தெரு பிரிவு வரையும், 26- ந்தேதி (செவ்வாய்க்்் கிழமை) தோப்பு தெரு பிரிவில் இருந்து கோவில் முன்பு நிலை சேருகிறது. இவ்வாறு 5 நாட்கள் தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி (புதன் கிழமை) இரவு 9 மணிக்கு சத்தாபரண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News