ஆன்மிகம்
சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூரில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை

Published On 2019-02-15 10:34 IST   |   Update On 2019-02-15 10:34:00 IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடந்தது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது.

இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அந்த வாயிலின் முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் இரவு 7.35 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலின் பிரதான வாயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

அப்போது கீழ ரத வீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எட்டு வீதிகளிலும் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

6-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News