ஆன்மிகம்

ராமபிரான் வழிபட்ட சிவத்தலம் திருவானைக்காவல்

Published On 2018-12-13 09:02 GMT   |   Update On 2018-12-13 09:02 GMT
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியின் இரு கண்களாக கருதப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுமாகும்.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியின் இரு கண்களாக கருதப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுமாகும். வைணவம், சைவத்தின் அடையாளங்களாக கருதப்படும் இந்த இரு ஆலயங்களும் மிகவும் தொன்மை வாய்ந்தவையாகும். இவற்றின் வரலாறானது இதிகாச காலத்தில் இருந்தே தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மூலவர் விமானம் ராமபிரானின் முன்னோர்களான இசுவாகு மன்னனால் வைகுண்டத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டு அவன் வழிபட்டு வந்ததாகும். ராமபிரான் தனது பட்டாபிஷேகத்தில் பங்கேற்ற ராவணனின் உடன் பிறந்த சகோதரர் விபீஷணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் வழிபடுவதற்கான அன்பு பரிசாக இந்த விமானத்தை வழங்கினார். இந்த விமானத்தை இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் தரையில் வைத்து விட்டு கரைபுரண்டு ஓடிய காவிரியில் நீராடி மகிழ்ந்து சந்தியாவதனம் செய்த போது பெருமாள் அந்த இடத்திலேயே நிலை கொண்டு விட்டார் என ஸ்ரீரங்கம் கோவில் தல வரலாறு கூறுகிறது.

இதே போன்ற ராமாயண இதிகாச தொடர்பு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் உள்ளது. ராம பிரான் இலங்கை வேந்தன் ராவணனை போரில் கொன்று சீதையை மீட்டபோது ராவணனின் தம்பி கும்பகர்ணனும் கொல்லப்பட்டான். ராவணனும் அவனது தம்பியான கும்பகர்ணனும் அசுர குலத்தில் பிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் பிரம்ம குலமரபில் வந்தவர்கள் என்பதால் அவர்களை கொன்ற பாவம் ராமபிரானை பிரம்ம ஹத்தி தோஷமாக நிழலுருவில் தொடர்ந்தது.

இதில் ராவணனை கொன்ற பிரம்ம ஹத்தி தோஷத்திற்காக ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை வடிவமைத்து நடத்திய பூஜையில் அந்த தோஷத்தில் இருந்து விடுதலையானார். பாவத்தில் இருந்தும் விடுதலை பெற்றார். ஆனால் கும்பகர்ணனை கொன்ற தோஷம் அவரை பின் தொடர்ந்தது. இதனால் ராமன் அயோத்தி செல்லும் பயணம் தடைபட்டது. பொன்னியாற்றங்கரையில் தவம் செய்து வந்த முனிவர்களிடம் ராமன் இதற்கு தீர்வு என்ன என கேட்க அதற்கு அவர்கள் ஞானபூமியாகிய வெண்ணாவல் காட்டில் (திருவானைக்காவல் கோவில் அமைந்துள்ள இடம்) சிவலிங்கம் அமைத்து சிவவழிபாடு செய்ய ஆலோசனை வழங்கினர்.

உடனே ராமனும் ஜம்பு முனிவர் திருக்கோவிலின் மேற்கு பகுதியில் குளம்வெட்டி அதன் தரையில் கோவில் எடுத்தார். அங்கதனை கொண்டு சிவலிங்கம் அமைத்து முறைப்படி சிவவழிபாடு செய்து தன்னை தொடர்ந்த பிரம்ம ஹத்தி பாவம் நீங்கப்பெற்றான். இதுவே ராமபிரான் வழிபட்ட இத்திருத்தலத்தின் வரலாறாகும்.

Tags:    

Similar News