ஆன்மிகம்
தங்கக்குதிரை வாகனத்தில் வில்-அம்பு,கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி.

பழனி முருகன் கோவிலில் விஜயதசமி விழா: வன்னிகாசூரனை வதம் செய்த முத்துக்குமாரசுவாமி

Published On 2018-10-20 05:30 GMT   |   Update On 2018-10-20 05:30 GMT
பழனி முருகன் கோவிலில் நடந்த விஜயதசமி விழாவையொட்டி, வன்னிகாசூரனை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்துக்குமாரசுவாமி வதம் செய்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 9 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் பத்ரகாளியம்மன் கோவில் மண்டபத்தில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், 6 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் ஆகியவை நடந்தது.

பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை, பத்ரகாளியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக மலைக்கோவிலில் காலை 5.50 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், விளா பூஜை, சிறுகால சந்தி, கால சந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை நடந்தது.

மதியம் 3 மணிக்கு மூலவரிடம் வில்-அம்பு, கத்தி, கேடயம், குத்தீட்டி, சக்திவேல் ஆகியவற்றை பெறும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சன்னதி வலம் வந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதன் பின்னர் மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டது.

இதனையடுத்து பாரவேல் மண்டபத்தில் வில்-அம்பு உள்ளிட்ட அயுதங்களை புலிப்பாணி பாத்திரசுவாமிகளிடம் வழங்கும் நிகழ்ச்சியும், மூலவர் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுத்தருளி சக்திவேல் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கிடையே வன்னிகாசூரனை வதம் செய்வதற்காக லட்சுமிநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, கருட வாகனத்தில் லட்சுமிநாராயண பெருமாள், புலிப்பாணி பாத்திரசுவாமிகள் ஆகியோர் கோதைமங்களம் கோதை ஈஸ்வரர் கோவிலுக்கு இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோதைமங்களம் கோதை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கோவில் எதிரே அமைக் கப்பட்டிருந்த மேடையில் வன்னி, வாழை மரங்களாக மாறி நின்ற வன்னிகாசூரனை வில்-அம்பு கொண்டு முருகப்பெருமானின் பிரதிநிதியாக புலிப்பாணி பாத்திரசுவாமி வதம் செய்தார். இதைத்தொடர்ந்து வில்-அம்பு உள்ளிட்ட அயுதங்கள் முத்துக்குமாரசுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சக்திவேல் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, சம்ரோட்சனை பூஜைக்கு பின்பு இரவு 11 மணிக்கு மேல் ராக்கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நவராத்திரி, விஜயதசமி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளை பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்திரமூர்த்திசிவம் ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

நவராத்திரி விழாவையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் தங்கரத புறப்பாடு நடைபெறவில்லை. நேற்றோடு நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் இரவு 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என பழனி முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News