கோவில்கள்

விற்குடி வீரட்டானேஸ்வரர், பரிமள நாயகி.

விற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்- நாகை

Published On 2023-07-03 07:14 GMT   |   Update On 2023-07-03 07:14 GMT
  • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
  • இக்கோவில் அம்மன் பரிமளநாயகி.

மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் செய்யும் புண்ணியங்கள் மற்றும் பாவங்களுக்கு ஏற்ப அவர்களின் வாழ்நாளில் நற்பலன்கள் மற்றும் தண்டனைகளை ஈசன் வழங்குகிறார். அதே நேரத்தில் எதிர்பாராத வகையில் தன்னை அறியாமல் தனது பக்தர்கள் செய்யும் பாவங்களை அவர்களுக்கு தகுந்த நேரத்தில் சுட்டிக்காட்டி மீண்டும் அந்த பாவத்தை அவர்கள் செய்யாமல் தடுக்கிறார். இதன் மூலம் தீய வினைகளில் இருந்து தனது பக்தர்களை காக்கும் ஈசன் வினை தீர்க்கும் ஈசன் என்று அழைக்கப்படுகிறாா்.

நாகை மாவட்டம் திருமருகல் அருகே விற்குடியில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவில் பக்தர்கள் தீய வினைகளை தீர்த்து வைப்பதாக நம்பப்படுகிறது.

சுயம்பு லிங்கம்

விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவர் வீரட்டானேஸ்வரர். தாயார் ஏலவார்குழலி, பரிமள நாயகி. தல விருட்சம் துளசி ஆகும். கோவில் தீர்த்தமாக சக்கர தீர்த்தம், சங்குதீர்த்தம் ஆகிய குளங்கள் உள்ளன. கோவில் அமைந்துள்ள ஊர் திருவிற்குடி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் தற்போது விற்குடி என அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. இதன் எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. இது படித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம்.

நாகலிங்க சிற்பம்

இக்குளத்தில் தீர்த்தக்கரையில் விநாயகர் கோவில் உள்ளது. கோபுர வாசலை கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலது புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாக உள்ளது. வெளிப்பிரகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிரகாரத்தில் வலமாக வரும் போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனிகவான், தனிக்கோவில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், ஞானதீர்த்தம் என அழைக்கப்படும் கிணறு, பிடாரி முதலிய சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலில் சலந்தரனைச் சம்ஹாரித்த மூர்த்தி ஜலந்த்தரவதமூர்த்தி என அழைக்கப்படுகிறாா். இக்கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது. தினமும் 4 கால பூஜைகள் இந்த கோவிலில் நடக்கிறது.

சொந்த வீடு

மேலும் இக்கோவிலில் வந்து வழிபடுவோருக்கு விரைவில் சொந்த வீடு கட்டி குடியேறும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் புதிய வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது தடை ஏற்பட்டால் விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டு இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தடைகள் நீங்கி விரைவில் நல்ல முறையில் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. மேலும் முன்னோர்களின் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால்

தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோவில் அம்மன் பரிமளநாயகி. பிருந்தை என்ற சொல்லுக்கு துளசி என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இந்த கோவில் வாஸ்து தோஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.

ஜலந்தராசூரன்

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்துக்கு வந்தார். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவம் எடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். இதனால் கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தார். அப்போது சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினார்.

அப்போது கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரன் என்பதால் இந்த குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.

வரம் வாங்கினான்

அவன் பெரியவன் ஆனதும் 3 உலகும் ் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், தனக்கு சாகாவரமும் வேண்டும் என பிரம்மனிடம் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அப்போது ஜலந்தராசூரன், தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும், என பிரம்மனிடம் வரம் வாங்கினான். இதனால் இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன்பு வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான்.

ராமாவதாரம்

இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், திருமாலே தாங்கள் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். சிவன் கூறியபடி திருமால் செய்ய தனது கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என பிருந்தை நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்தநேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீங்களும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும், என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.

சக்கரத்தை பெற்றார்

பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீக்குளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதை பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால் சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் 2 பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் குடமுழுக்கு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி நடந்தது. விற்குடி வீராட்டானேஸ்வரர் ேகாவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

பிருந்தையின் சாபத்தால் சீதையை பிரிந்த ராமா்

கற்பிற்சிறந்த பிருந்தையை ராமர் ஏமாற்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிருந்தையின் கணவர் ஜலந்தராசூரனை சிவன் வதம் செய்தாா். இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த பிருந்தை தான் தனது கணவனை இழந்து தவிப்பது போல நீங்களும்(திருமால்) உங்கள் மனைவியை இழந்து தவிப்பீர்கள் என சாபம் அளித்து விட்டு தீக்குளித்து உயிர் துறந்தாள். இதனால் ராமாவதாரம் எடுத்த விஷ்னு தனது மனைவி சீதையை பிரிந்து தவித்தார் என புராண வரலாறு கூறுகிறது. இதன்மூலம் கற்பிற்சிறந்த பெண்ணின் சாபம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

கோவிலுக்கு செல்வது எப்படி?

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள விற்குடியில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை- கங்களாஞ்சேரி- திருவாரூர் சாலையில் உள்ள விற்குடி பிரிவு சாலைக்கு சென்று அங்கிருந்து 2 கி.மீட்டர் தொலையில் உள்ள இக்கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் நாகப்பட்டினத்துக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 24 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

Tags:    

Similar News