கோவில்கள்

வரலாற்று சிறப்பு மிக்க தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்- திண்டுக்கல்

Published On 2023-06-28 06:52 GMT   |   Update On 2023-06-28 06:52 GMT
  • இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
  • கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுத தேவராயர் மற்றும் ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கலைச்சிற்ப நுணுக்கத்துடன் இந்த கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகிறார்.

தாடிக்கொம்பு அருகே வடக்கு நோக்கி செல்லும் குடகனாறு ஆற்றங்கரையில் அமர்ந்து மண்டூக முனிவர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவத்திற்கு இடையூறு செய்யும் விதமாக தாளாசூரன் என்ற அரக்கன் பல்வேறு இடையூறுகளை செய்து வந்தான். இதனால் மதுரையை அடுத்த அழகர்மலையில் உள்ள திருமாலிருஞ்சோலை கள்ளழகரை நோக்கி தனது தவத்திற்கு உதவி செய்ய வேண்டி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தால் ஈர்க்கப்பட்ட திருமாலிருஞ்சோலை அழகர், மண்டூக முனிவருக்கு இடையூறு செய்த தாளாசூரன் என்ற அரக்கனை வதம் செய்து முனிவரின் தவத்தை தொடர உதவி செய்தார். பின்னர் முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவரும் கள்ளழகர் இப்பகுதியில் வாசம் செய்து இப்பகுதியில் வாழும் மக்களை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முனிவரின் வேண்டுதலை ஏற்று தாடிக்கொம்பு பகுதியிலேயே கள்ளழகர் என்ற சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீற்றிருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

இந்த கோவிலில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுடன் நின்றகோலத்தில் எழுந்தருளி உள்ள மூல சன்னதியும், சவுந்தரவல்லி தாயாருக்கு என தனி சன்னதியும், ஆண்டாளுக்கென்று ஒரு தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. இதுதவிர பரிவார மூர்த்திகளான நம்மாழ்வார், இரட்டை விநாயகர், ஹயக்ரீவர், தன்வந்திரி பெருமாள், லட்சுமி நரசிம்ம பெருமாள், வேணுகோபால சுவாமி, ராம பக்த ஆஞ்சநேயர், சொர்ண ஆகர்ஷண பைரவர், விஸ்வக்சேனர் ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. மேலும் கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

கல்விக்கு ஹயக்ரீவர், உடல்நலத்திற்கு தன்வந்திரி பெருமாள், கடன்களில் இருந்து மீள லட்சுமி நரசிம்மர், திருமண தடை நீங்க ஆண்டாள், ரதி, மன்மதன், குழந்தை பாக்கியம் கிடைக்க வேணுகோபால சுவாமி, பொருளாதார சிக்கல்கள் நீங்க சொர்ண ஆகர்ஷண பைரவரை பக்தர்கள் வணங்கினால் தங்களது வேண்டுதல் நிறைவேறும். அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சகல வரங்களையும் அளிக்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.

புகழ்பெற்ற இசை தூண்கள்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மூலஸ்தானத்தின் பின்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார், சவுந்தரவல்லி தாயார். சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பு தனது வேண்டுதல்களை சவுந்தரவல்லி தாயாரிடம் சமர்ப்பித்தால் அவர் மூலமாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் சக்கரத்தாழ்வார், வைகுண்டநாதர், ராமர், ஊர்த்தவ தாண்டவர், இரண்ய யுத்தம், மன்மதன், உலகளந்த பெருமாள், கார்த்தவீரிய அர்ச்சுனன், மகாவிஷ்ணு, அகோர வீரபத்திரர், தில்லை காளி, இரண்ய சம்ஹாரம், ரதி ஸ்ரீ வேணுகோபாலன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நின்ற நிலையில் விநாயகரும் எழுந்தருளியுள்ளார். இதுதவிர புகழ்பெற்ற 2 இசை தூண்களிலும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.

பொக்கிஷ காவலர் சொர்ண ஆகர்ஷண பைரவர்

சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், இளநீர், தேன் மற்றும் அரளிப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை காணிக்கையாக அளித்து வழிபாடு செய்கின்றனர்.

ஞானசக்தி அருளும் ஹயக்ரீவர்

கல்வியின் கடவுள் சரசுவதி. அந்த சரசுவதிக்கு ஆசானாக திகழ்ந்தவர் ஹயக்ரீவர். இவர் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் முதலாவதாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவரை திருவோண நட்சத்திரம் மற்றும் புதன்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாத்தி, தேன் மற்றும் துளசியுடன் பிரார்த்தனை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஞானசக்தி ஏற்படுவதுடன் அவர்களின் கல்வி வளர்ச்சிகளும் மேன்மை அடையும்.

தும்பிக்கை ஆழ்வார்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ராஜகோபுரத்தில் உள் நுழைந்த உடன் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ள விஸ்வக் சேனரை வணங்கி ஆலயத்துக்குள் பிரவேசம் செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து பரிவார சன்னதிகளில் தென்பகுதியில் முதலாவதாக நம்மாழ்வார் எழுந்தருளி உள்ளார். இவரை அடுத்து தும்பிக்கை ஆழ்வார் என்று வைணவத்தில் அழைக்கப்படும் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

Tags:    

Similar News