கோவில்கள்

ஸ்ரீ ஆதிநாராயணர் ஸ்ரீ சிவனணைந்த பெருமாள் கோவில்- புன்னை நகர்

Published On 2023-01-28 07:42 GMT   |   Update On 2023-01-28 07:42 GMT
  • இக்கோயில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது.
  • பெருமாளும், சிவனும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னைநகரில் சீனிவாசப்பெருமாள் தன் தேவியருடன் திருவருட்பாலிக்கிறார். சிவ-விஷ்ணு ஒருமைப்பாடு காணும் இத்தலத்தில் பெருமாளுக்கும், சிவனுக்கும் தனித்தனி ராஜகோபுரம் அமைந்துள்ளது. வடநாட்டு பாணி மற்றும் தென்னிந்திய அமைப்பில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

தினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு, முன்னே நிற்கும் பக்தர்கள் மீது பிரதிபலிப்பது பெருமாளிடமிருந்து நேரடியாகவே ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது. இத்தலம் அந்நாளில் புன்னை மரங்கள் சூழ, பசுக்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலம் புன்னையடி என வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் தல விருட்சம் புன்னை மரம் என்பதும், அனைத்து பெருமாள் கோயில்களிலும் பிரம்மோற்சம் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தரிசனம் தருவார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இக்கோயில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது. சைவ, வைணவ பேதமின்றி பெருமாளும், சிவனும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசி கரைப்பகுதியில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.

ராஜகோபுரம் அடுத்து உற்சவ மண்டபம், பிராகார மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பகிரகம் என ஆகம வரிசைப்படி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் முழுமுதற்கடவுள் ராஜ கணபதி முதல் தரிசனம் தருகிறார். ஆன்மிக கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்துவதற்காக உற்சவ மண்டபம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் எனப்படும் அஷ்டலட்சுமி மண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம்.

கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் உற்சவ மூர்த்தியாக அர்த்தமண்டபத்தில் அருள்கிறார். இங்கே பெருமாளின் பத்து அவதாரங்களும் அருமையாக வடிக்கப்பட்டுள்ளன. கன்னி மூலையில் தாயார் பத்மாவதி தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார்.

அடுத்தடுத்து வடபழநி முருகன், கிருபானந்த வாரியார், ராஜகோபாலர், வள்ளி-தெய்வானை சமேத தணிகை முருகன் ஆகியோரை தனித்தனியே தரிசிக்கலாம். வாயு மூலையில் ஆண்டாள் உள்ளார். சீனிவாசப் பெருமாளின் மூல ஸ்தானத்தின் வெளிப்பிராகாரத்தில் தெற்கு நோக்கி கணபதி, தட்சிணாமூர்த்தி, பின் பக்கம் குருவாயூரப்பன், வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஈசான்யத்தில் ஆஞ்சநேயர் என தரிசனம் பெறலாம்.

மகாமண்டபத்தில் பெருமாளை வணங்கியபடி கருடாழ்வார் நிற்கிறார். அடுத்துள்ள ஆதி நாராயணர் -சிவனணைந்த பெருமாள் திருக்கோயிலில் மூலவராக ஆதி நாராயணர் நின்ற கோலத்தில் கொலுவிருக்கிறார். ஆதிநாராயணருக்கு வலது பக்கம் பெரிய பலவேசம், சின்ன பலவேசம் இருவரும் தனிச் சந்நதியிலும், வடக்கு நோக்கி சிவனணைந்த பெருமாள், தெற்கு நோக்கி சிவகாமி, பிரம்ம சக்தி, பேச்சி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

கோயில் பிராகாரத்தில் பூக்கண் பலவேசம், சப்பாணி முத்து, லாடகுரு சன்னியாசி, முத்து பிள்ளையம்மன், இருளப்பர், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன் ஆகிய கிராம தெய்வங்கள் திகழ்கிறார்கள். மூலவருக்கு வெள்ளிக்கிழமைகளிலும், உற்சவருக்கு புதன் கிழமைகளிலும் திருமஞ்சனம் நடக்கிறது.

இதில் கலந்து கொண்டால் திருமணத்தடை நீங்குவதாக ஐதீகம். வியாழன் தோறும், சனி முதலான கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் இத்தல பெருமாளின் ஏகாந்த சேவையை தரிசிக்கலாம்.

திருநெல்வேலி-திருச்செந்தூர் வழியில் உள்ள குரும்பூர் சென்று அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ. தூரம் கடந்தால் புன்னை நகரை அடையலாம்.

Tags:    

Similar News