கோவில்கள்

அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோவில்

Published On 2022-07-01 05:33 GMT   |   Update On 2022-07-01 05:33 GMT
  • எட்டு திருக்கரங்களுடன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார் ஆதிகேசவபெருமாள்.
  • பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 45 வது திவ்ய தேசம்.

மூலவர் : ஆதிகேசவப்பெருமாள்

தாயார் : அலமேல்மங்கை

தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரிணி

மாவட்டம்: காஞ்சிபுரம்

தலவரலாறு:

இந்திரனுக்கு நிகரான தகுதியுடைய மகாசந்தன் எனும் யோகிக்கு இந்த பூலோக பிறவியை விட்டு இறைவனின் திருவடி சேர எண்ணம் தோன்றியது. எனவே பெருமாளை நோக்கி தவம் புரிந்தார்.

இதைக் கண்ட இந்திரன், தன் பதவி பறிபோய் விடுமோ என அஞ்சி மகாசந்தன தவத்தை கலைக்க தேவலோக மங்கைகளை அனுப்பி பார்த்தான். எதற்கும் அசையாத யோகி தவத்தில் மும்முரமாக இருந்தார். பிறகு இந்திரன் ஆண்யானையாக உருமாறி யோகியின் இருப்பிடம் வந்தார்.

இந்த யானையின் அழகில் மயங்கி தானும் யானையாக மாறி, யானைகளின் கூட்டத்தோடு சேர்ந்து காடுகளில் திரியும் போது, அங்குள்ள சாளக் கிராமத்தில் நீராடியபோது தன் யோக வாழ்க்கை நினைத்து மிகவும் வருந்தியது, பல திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளை வழிபட்டு பரிகாரம் தேடியது, மிருகண்டு முனிவர் இதன் நிலைக்கண்டு வருந்தி காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை வழிபட்டால் உனது எண்ணம் நிறைவேறும் என்றார். அவ்வாறே யானையும் வழிபட்டு வந்தது.

ஒரு சமயம் அஷ்டபுஜ பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு அந்த யானைக்கு கிடைத்தது. அவரது அழகில் மயங்கி அவரையே வழிபட்டு, தினமும் 14 ஆயிரம் மலர்கள் கொண்டு பூஜித்து வந்தது.

ஒருநாள் பூக்கள் இல்லாத வேளையில் அருகில் உள்ள குளத்தில் பூ பறிக்க சென்ற போது, அதில் உள்ள முதலை காலை கவ்வியது, பயந்துபோன யானை "ஆதிமூலமே' என அபாய குரல் கொடுத்தது. உடனே பெருமாள் கருட வாகனத்தில் ஏறி வந்து தனது சக்கரத்தினால் முதலையின் தலையை எடுத்து யானையை காப்பாற்றியதாக வரலாறு.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 45 வது திவ்ய தேசம். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் எட்டு திருக்கரங்களுடன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார் ஆதிகேசவபெருமாள்.

சாதாரணமாக சொர்க்கவாசல் ஒரு திசையிலும் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் இருக்கும், ஆனால் இங்கு சொர்க்க வாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி உள்ளது. வீடுகட்ட நிலம், விளை நிலங்களை வாங்க, கட்டிய வீடுகளில் பிரச்சனை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலன் அடைவதாக நம்பப்படுகிறது.

திறக்கும் நேரம்: காலை 6:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

Tags:    

Similar News