கோவில்கள்

அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோவில் - அரியக்குடி

Published On 2022-06-07 04:09 GMT   |   Update On 2022-06-07 04:09 GMT
  • திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
  • இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது.

மூலவர் - திருவேங்கடமுடையான்

தாயார் - ஸ்ரீதேவி, பூதேவி

பழமை - 500 வருடங்களுக்கு முன்

நாட்டுக் கோட்டை நகரத்தார்களால் அமைக்கப்பட்ட புகழ்மிக்க வைணவத்தலம் இது. இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார், திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந்தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

அப்போது அவர் முன் "எம்பெருமான்" தோன்றினார். "தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்" எனக் கூறி மறைந்தார். ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், "நாளை நீ மேற்கே செல். என் இடம் தெரியும்" என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது. திருப்பதியை போன்று பெருமாளைத் தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இக்கோயிலில் உள்ள கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது அதிசயமாக உள்ளது. ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஆடி சுவாதியன்று கருடனின் ஜென்மநட்சத்திரமான "மகா சுவாதி" நடக்கிறது.

இராமானுஜர் காலத்தில் உற்சவ விக்கிரகங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து அனைத்து கோயில்களுக்கும் கொடுக்கப்படுகின்றன என்பதை அறிந்த சேவுகன் செட்டியார் தனது முயற்சியால், உடையவரால் ஆராதிக்கப்பெற்ற திருவேங்கடம் உடையானை இத்தலத்திற்கு கொண்டு வந்தார். திருப்பதியிலிருந்து சடாச்சரியும், திருமயத்திலிருந்து அக்னியும் கொண்டு வரப்பெற்று திருவேங்கடம் உடையான் கோயில் திருப்பணி துவங்கியது. அன்று முதல் அரியக்குடி "தென்திருப்பதி" எனப் புகழ் பெற்றது.

இங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் பிள்ளையார்பட்டி தலம் உள்ளது.

திருவிழா:

சித்திரை மாதப் பிறப்பன்று திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமியன்று சுவாமி வீதியுலா, வைகாசியில் பிரமோற்ஸவம், ஆடிப்பூர உற்சவம், கோகுலாஷ்டமி, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் சுவாமிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல விழாக்கள் நடக்கின்றன.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Tags:    

Similar News