ஆன்மிகம்
நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்

நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்

Published On 2020-10-12 01:23 GMT   |   Update On 2020-10-12 01:23 GMT
நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாகும்.
நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் ஆலயங்களைப் போல, இந்தக் கோவிலும் அம்மனை முன்னிலைப் படுத்தும் திருக்கோவிலாக அமைந்திருக்கிறது. மூலவர் ‘காயாரோகணேஸ்வரர்’ (ஆதிபுராணர்) என்றும், அம்பாள் ‘நீலாயதாட்சி’ (கருந்தடங்கண்ணி) என்றும் அழைக்கப்படுகிறார்கள். சப்தவிடங்கத் தலங்களில் இது இரண்டாவது தலம்.

சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கியது, நாகப்பட்டினம். புண்டரீக முனிவரை, இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம் இதுவாகும். இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோவிலின் தென்கிழக்கு பிரகாரத்தில் இருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது.

இங்கு சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையார் என்பவர், இந்தக் கோவிலில் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, ‘நாகாபரண விநாயகர்’ என்று பெயர் வந்தது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னிதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இத்தலத்தின் பாதாளத்தில் இருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும் இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, ‘காலசம்ஹார பைரவராக’ அருள்கிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருள்வதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கி வீற்றிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், இவரை சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரே சன்னிதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், அஷ்டபுஜ பைரவர், அஷ்டபுஜ காளி ஆகிய இருவருக்கும் சன்னிதி இருக்கிறது.

எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள், இங்கு சிலை வடிவில் காட்சி தருகின்றனர். நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க, இரு கால்களையும் தொங்கவிட்டபடி உள்ள கஜலட்சுமியையும் இங்கு தரிசிக்கலாம். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் 8 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். சுவாமி சன்னிதியின் முன்பாக உள்ள மண்படத்தின் மேற்பகுதியில் 12 ராசிக்கான சக்கரங்கள் காணப்படுகின்றன.

இந்தக் கோவிலில் மாசி மகத்தன்று, சிவன் கடலுக்குச் சென்று தீர்த்தமாடும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும். இங்குள்ள ஆறுமுகப்பெருமானின் சிலை, திருவாசியுடன் சேர்த்து 12 கரங்களில், ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் அதிபத்த நாயனார், வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், ஆத்மலிங்கம், பிள்ளையார், பழநியாண்டவர், இடும்பன் சன்னிதிகள் உள்ளன

ராஜதானி மண்டபத்தில் விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய மயில் மீதமர்ந்த பெரிய மூர்த்தமான ஆறுமுகப்பெருமான், காசி விஸ்வநாதர், பைரவர் முதலானோரின் சன்னிதிகள் உள்ளன. துவாரபாலகர்களின் அருகில் ஒருபுறம் விநாயகரும், மற்றொருபுறம் அதிகார நந்தியும் உள்ளனர். உள்பிரகாரத்தில் சூரியன், அறுபத்துமூவர், மாவடிப்பிள்ளையார், வெண்ணெய்ப்பிரான், அருணாச்சலேஸ்வரர், பைரவர், கஜலட்சுமி முதலானோரின் சன்னிதிகள் உள்ளன. நவக்கிரகங்கள் அனைத்தும் (மூன்று வரிசையாக) சிவனாரை நோக்கியவாறு மேற்கு நோக்கிய திசையில் அமைந்துள்ளன.

அழுகுணி சித்தர்

அழுகுணி சித்தரின் ஜீவசமாதி இக்கோவிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயசம் நைவேத்தியமாக படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். இந்தக் கோவிலைச் சுற்றிலும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சவுந்தரராஜப் பெருமாள் கோவில், நாகநாதர் கோவில், அழகியநாதர் கோவில், அமரநந்தீசர் கோவில், கைலாசநாதர் கோவில், விஸ்வநாதர் கோவில், மேலைக்காயாரோகணர் கோவில், மிகவும் சிறப்பு வாய்ந்த நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் முதலான ஆலயங்களும் காணப்படுகின்றன.
Tags:    

Similar News