ஆன்மிகம்

கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோவில் - அரியலூர்

Published On 2019-04-22 05:09 GMT   |   Update On 2019-04-22 05:09 GMT
கலியுகவரதராஜப் பெருமாள் கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது.
சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள்.
அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி.
தலவிருட்சம் : மகாலிங்கமரம்.

தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. மாறாக சிலைகள் எதுவும் இல்லை. இங்கு இக்கோவிலை கட்டியவர்களின் சிலைகளும் உள்ளது.

தல வரலாறு : 250 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அருகே, வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நடத்தி வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த அழகிய பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் "கவலைப்படாதே பக்தா!, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக்காண்பாய்!' என இறைவன் கூறி மறைந்தார்.

காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, கன்றுடன் பசு நின்றிருந்தது, அதே இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பத்தையும் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. பசு, அம்மாவெனக் கதறி அவரிடம் வந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் தொட்டு வணங்கினர். பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு, மீண்டும் மங்கான், கனவில் "எண்ணாயிரம் ஆண்டு யோகம் செய்வோர் கூட காணக்கிடைக்காத பெரும் பொருளைக் கண்டு வணங்கி வந்த நீ! பொய்ப்பொருளான, உன் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளான என்னைக் கைவிட்டாய், என்னே உன் அறியாமை! உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியமாட்டாய், சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டி அச்சு முறிந்ததால் உச்சிமுனை உடைந்து கம்பமாய் என்னை அங்கேயே விட்டுவந்தார்கள்.

அதே கம்பம் தான் நீ பார்த்தாய், தொடர்ந்து கவலை கொள்ளாதே, கம்பத்தை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது. கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் நான் என்பதை அறிந்துகொள். கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் "கலியுக பெருமாள்” எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இந்த கோயில் தான் தற்போது கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் முகவரி : அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்,

கல்லங்குறிச்சி - 621 705, அரியலூர் மாவட்டம்.

Tags:    

Similar News