ஆன்மிகம்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு மாதாவின் தேர் பவனி வந்த காட்சி

வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2020-09-08 11:03 IST   |   Update On 2020-09-08 11:03:00 IST
வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் தேரும் அடுத்து சூசையப்பர் தேரும், கடைசியாக அன்னை மாதா பெரிய தேரும் சென்றது.
நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டது. கடந்த 2-ந் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழிபாடு நடத்த நாகை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் தேரும் அடுத்து சூசையப்பர் தேரும், கடைசியாக அன்னை மாதா பெரிய தேரும் சென்றது. தேர்பவனி ஆலய வளாகத்தை சுற்றி நடந்தது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், திருச்சி மண்டல ஐ.ஜி.ஜெயராமன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கம் நடக்கிறது.

Similar News