ஆன்மிகம்

சிறுநீரக நோயை குணமாக்கும் சுத்தரத்தினேஸ்வரர்

Published On 2018-10-13 01:25 GMT   |   Update On 2018-10-13 01:25 GMT
சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்க வல்ல ஆற்றல் மிக்கவராக இருக்கிறார், சுத்தரத்தினேஸ்வரர் கோவிலில் அருள்புரியும் சுத்தரத்தினேஸ்வரர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே அமைந்துள்ளது ஊட்டத்தூர் திருத்தலம். இங்கு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் கோவில் இருக்கிறது. அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்த ஆலயம், ஆசிய கண்டத்திலேயே அபூர்வமாக கிடைக்கும் பஞ்சநதன கல்லால் ஆன பஞ்ச நதன நடராஜர் சிலையைக் கொண்ட சிறப்பு மிக்கதாகும்.

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்க வல்ல ஆற்றல் மிக்கவராக இருக்கிறார், இத்தலத்தில் அருள்புரியும் சுத்தரத்தினேஸ்வரர். இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், வெட்டிவேரை எடுத்துவந்து இங்குள்ள பஞ்ச நதன நடராஜருக்கு மாலை சாற்றி அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பருகி வழிபடுவது வழக்கம்.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு இளம் பெண்கள் பிரார்த்தனை செய்து 11 வாரங்களுக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்துவேண்டிக்கொண்டால் திருமணம் தடைபடாமல் விரைந்து நடக்கிறது. இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, வீரபத்திரேஸ்வரர் சன்னிதிகள் அழகுற அமைந்துள்ளன.

கஜலட்சுமி சன்னிதியை நோக்கி உள்ள காலபைரவருக்கு, 11 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால் குழந்தைகளின் மன பயம் நீங்குகிறது. காலபைரவரிடம் விவசாயிகள் தங்களது கால்நடைகள் நோயுற்று இருக்க வேண்டும் என்பதற்காக, தேய்பிறை அஷ்டமி அன்று காலஹஸ்த மந்திரத்தை ஜெபித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த வேண்டுதலால் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் விரைவில் நீங்குகின்றன.

கல்லால மரத்தின் கீழ் வீற்றிருப்பது போன்ற தட்சிணாமூர்த்தியை, ஒவ்வொரு குரு ஹோரையில் அதிகாலை நேரத்தில் 11 வாரங்களுக்கு கொண்டக்கடலையை மாலையாக கட்டி சாற்றி வழிபட்டால் தாங்கள் நினைக்கும் நல்லெண்ணங்கள் நிறைவேறுகிறதாம்.

இங்குள்ள பஞ்ச நதன நடராஜர் சிலை பஞ்ச நதன கல்லால் உருவாக்கப்பட்டதாகும். இந்த நடராஜர் சிலைக்கு வெட்டிவேர் மாலையை சாற்றி பிரம்மதீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக நீரையும், பிரம்மதீர்த்த சுனை நீரையும் 45 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகள் நீங்கப்பெறுகின்றனர். அதனால் இக்கோவில் நடராஜர் தனிச்சிறப்பு கொண்டு விளங்குகிறார். அதற்கு இக்கோவிலுக்கு ஏற்கனவே வந்து வேண்டுதலும், சிறுநீரக உபாதைகளும் நீங்கி சுகம் அடைந்தபிறகு வேண்டுதல் பிரார்த்தனையை நிறைவேற்றும் பக்தர்களே சான்றாகும்.

பெரம்பலூரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பாடாலூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது ஊட்டத்தூர் திருத்தலம்.
Tags:    

Similar News