ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

Published On 2022-05-24 04:50 GMT   |   Update On 2022-05-24 04:59 GMT
இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நாமக்கல் பிரதான சாலையில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8-ந் தேதி பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கோவில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 9-ந் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ந் தேதி மறுகாப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் வடிசோறு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நேற்று அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. நாமக்கல் சந்தை பேட்டை புதூர், ஆர்.பி.புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தூக்குத்தேரில் வைத்து மாரியம்மனை வீதி, வீதியாக தூக்கி சென்றனர்.

பொதுமக்கள் ஆங்காங்கே கூடிநின்று மாரியம்மனை வழிபட்டனர். நகரம் முழுவதும் வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டு இருந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினசரி வருகிற ஜூலை மாதம் வரை காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News