ஆன்மிகம்
புனித ராஜகன்னி மாதா ஆலயம், கூடங்குளம்

புனித ராஜகன்னி மாதா ஆலயம், கூடங்குளம்

Published On 2020-10-10 08:35 GMT   |   Update On 2020-10-10 08:35 GMT
கூடங்குளம் புனித ராஜகன்னி மாதா ஆலயமானது தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள பங்கு ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கூடங்குளம் புனித ராஜகன்னி மாதா ஆலயமானது தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள பங்கு ஆலயங்களில் ஒன்றாகும்.  கூடங்குளம் தூத்துக்குடிக்கு மேற்கே 70 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலிக்கு தெற்கே 70 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரிக்கு கிழக்கே 59 கி.மீ தொலைவிலும் மேலும் திசையன்விளையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

புனித ராஜகன்னி மாதாவின் ஆலயம் சுமார் 1650-ல் ஒரு சிறிய ஆலயமாகக் கட்டப்பட்டது. தற்போதுள்ள பெரிய ஆலயம் 1880-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1927-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட்டது. 1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. ரோச் அவர்கள் ஆலயத்தை அர்ச்சித்து  திறந்துவைத்தார்.

ஆரம்ப காலங்களில் இவ்வாலயமானது அருகிலுள்ள பங்குகளான கூடுதாழை, கூட்டப்பனை, சொக்கன்குடியிருப்பு மற்றும் திசையன்விளை ஆகிய பங்குகளில் கிளைப் பங்காக இணைந்திருந்தது. 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டது. அருட்தந்தை. பர்னபாஸ் அவர்கள் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றினார்.

திருப்பலி நேரங்கள்:
 
வார வழிபாட்டு நிகழ்வுகள்:

* தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

* மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.00 மணி வரை புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

* மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை புனித சவேரியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

* மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.00 மணி வரை புனித ராஜகன்னி மாதா சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள்:

* ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6.45 மணி முதல் 8.00 மணி வரை திருப்பலி நடைபெறும்.

 புனித ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா:

* ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
* ஒவ்வொரு நாளும் காலை திருப்பலியும், மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும்  நடைபெறுகிறது.
* நவ நாட்களில் ஒவ்வொரு நாளையும் ஊரின் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், திரு இருதய சபையினர், மரியாயின் சேனை சபையினர், திருக்குடும்ப சபையினர், புனித அந்தோணியார் இளைஞர் சபையினர், புனித அமலோற்பவ அன்னை சபையினர், பாலர் சபையினர் மற்றும் வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் ஆகியோர் சிறப்பிக்கின்றனர்.
* ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழா நாட்களில் புனித ராஜகன்னி அன்னையின் திருத்தேர் ஊரைச் சுற்றிலும் பவனி வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
* திருவிழா நிறைவுற்ற மறுநாள் மதியம் ஊர் பொது அசனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பாக ஊர் பொது அசனம் நடைபெறும்.

தொடர்புக்கு:

அருட்தந்தை. ப்ராக்ரஸ் (Fr. Progress) ,
பங்குத் தந்தை,
புனித ராஜகன்னி மாதா ஆலயம்,
கூடங்குளம் -628656,
தூத்துக்குடி மாவட்டம்.

தொலை பேசி எண்:  04639 255335
Tags:    

Similar News