ஆன்மிகம்
இயேசு

சிறந்த சீடனாக வாழ முடியுமா..?

Published On 2020-07-31 08:57 GMT   |   Update On 2020-07-31 08:57 GMT
அன்பை மட்டுமே பொழிந்து மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் வாழ்ந்தால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடுமா என்றால், அவை மட்டுமே போதாது என்கிறார் இயேசு.
தன்னை நாடிவந்து புதுவாழ்க்கை வாழ வழிகேட்டவர்களிடம் இயேசு இவ்வாறு விளக்கினார். “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள். மற்றவர்களை நீங்கள் எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்.

உங்கள் கண்ணில் இருக்கிற உத்திரத்தைக் கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்? உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக்கும்போது நீங்கள் உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா’ என்று எப்படிக் கேட்க முடியும்? முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்” என்று கூறி நாம் நீதிபதிகள்போல் யாரையும் தீர்ப்பிடத் தேவையில்லை என்று கூறினார்.

அன்பை மட்டுமே பொழிந்து மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் வாழ்ந்தால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடுமா என்றால், அவை மட்டுமே போதாது என்கிறார் இயேசு. ‘தேடல்’ வாழ்க்கையின் மிக முக்கியச் செயல்பாடு என்பதையும் அவர் எடுத்துக்கூறத் தவறவில்லை.

“கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும்.

உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பீர்களா, மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தந்தை தன்னிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள்” என்ற இயேசு, சிறந்த சீடத்துவ வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களைப் பாறையின் மீது வீட்டைக் கட்டிய புத்திமான் என்று கூறினார்.

“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறை மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். பெருமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கரக் காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை.

ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் இடப்பட்டிருந்தது. அதேநேரம், நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டும் அவற்றின்படி நடக்காதவன் மணல்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாத மனுஷனைப் போல் இருக்கிறான். பெரு மழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கரக் காற்றடித்து, அந்த வீட்டைத் தாக்கியபோது, அது இடிந்து தரைமட்டமானது” என்று சொன்னார்.

சிறந்த சீடத்துவ வாழ்வு குறித்து இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து அங்கே மக்கள் அசந்துபோனார்கள். ஏனென்றால், அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கனமான விஷயங்களையும் மக்களின் மொழியில் அவர் பேசியதுதான்.

Tags:    

Similar News