ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: மனந்திரும்புங்கள்

Published On 2020-03-21 08:51 IST   |   Update On 2020-03-21 08:51:00 IST
இது எத்தனை தவறு, இப்படி பேசுவதுதான் மிக கொடிய பாவம், என்று இயேசு சொல்லியிருப்பதை இக்கட்டுரையில் பார்க்கின்றோம்.
இயேசு வாழ்ந்த காலத்தில் ரோம பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யூதேயா தேசத்தின் 5-ம் ஆளுனராக இருந்த பிலாத்து என்பவன் சில கலிலேய மக்களை கொன்று குவித்தான். அதை கண்டவர்கள் இயேசுவுக்கு, நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். ஆனால் இயேசுவோ அவர்களை நோக்கி இப்படி இந்த கலிலேயர் மரித்ததினால் இவர்கள் மற்றவர்களை விட மகா பாவிகள் என்று நினைத்தீர்களோ? சீலோவாமிலே கோபுரம் விழுந்து 18 பேர் மரித்தார்களே, அவர்கள் எல்லோரும் பிறரை விட மிகப்பெரிய குற்றம் செய்தவர்களென்று நினைத்தீர்களோ? அப்படி அல்லவென்று சொன்னவர், இவ்வாறு அவதூறு பேசாமல் மனந்திரும்புங்கள் என்றார் இயேசு.

இன்று கூட உலகில் அவ்வப்போது ஏதேனும் இயற்கை பேரழிவுகள், விபத்துகள், கொள்ளை நோய்கள் போன்ற துயர சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. திடீரென திகிலூட்டும் பெரு வெள்ளம், பூமி அதிர்ச்சி, சுனாமி, சூறாவளி, வைரஸ் நோய் போன்றவைகள் மனித உயிருக்கு பேரிழப்பு ஏற்படுத்துகிறது.

இத்தகைய பேரழிவின்போதும், அச்சத்தின் விளிம்பில் வாழ்ந்தாலும், நம்மில் சிலர் தவறான கருத்துகளையும், அவதூறுகளையும் பரப்பி வருகிறோம். அதாவது இப்படிப்பட்ட பேரிடர்களில் மரித்தவர்கள், அதில் துன்பப்படுபவர்கள் எல்லோரும் மிகுந்த பாவம் செய்தவர்கள். அதனால் கடவுள் அவர்களை தண்டிக்கிறார் என தீர்ப்பு சொல்கிறோம்.

இது எத்தனை தவறு, இப்படி பேசுவதுதான் மிக கொடிய பாவம், என்று இயேசு சொல்லியிருப்பதை இக்கட்டுரையில் பார்க்கின்றோம். பேரிடர்களும், கொள்ளை நோய்களும் பரவும்போது, அவதூறு பேசாமல், இத்தருணத்தில் நம்முடைய வாழ்வை கிறிஸ்துவுக்குள் சீர் செய்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்து, சகோதர சிநேகத்துடன் வாழ முற்படுவோம்.

சகோதரி. ரூத்பிமோராஜ், கே.ஜி. கார்டன், திருப்பூர்.

Similar News