ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: சாபத்தில் இருந்து விடுதலை

Published On 2020-03-19 03:36 GMT   |   Update On 2020-03-19 03:36 GMT
இந்த தவக்காலத்தில் இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளையும், கல்வாரி சிலுவையிலே தம்முடைய ரத்தத்தை சிந்தினதையும் நாம் தியானித்து வருகிறோம்.
இந்த தவக்காலத்தில் இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளையும், கல்வாரி சிலுவையிலே தம்முடைய ரத்தத்தை சிந்தினதையும் நாம் தியானித்து வருகிறோம். சிலுவையில் தொங்கிய இயேசுவின் கைகளும், கால்களும் ஆணிகளால் அடிக்கப்பட்டது. தலையிலே முள் கிரீடத்தை வைத்து அழுத்தினார்கள். அவரது சரீரத்தில் எல்லா இடங்களிலும் ரத்தம் வழிந்தோடியது. ஆனால் சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம். இவ்வளவு ஆத்தும வேதனை மற்றும் மரண அவஸ்தைகளை அவர் அனுபவித்ததன் காரணம் என்னவென்றால் அந்த மரணத்தின் மூலம் இந்த உலகத்தில் கொண்டுவர நினைத்த ஆசீர்வாதமே.

ஆதாம் மூலம் மனுக்குலத்திற்கு வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக இந்த வேதனையை அனுபவித்தார் என்று கூறப்படுகிறது.

வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 5-ம் அதிகாரம் 21-ம் வசனத்தில், ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்’ என்று சொல்லப்பட்டுள்ளது. 1 பேதுரு 2-ம் அதிகாரம், 24-ம் வசனத்தில், ‘நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

எனவே தேவ பிள்ளைகளே, நமக்காக சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்கவில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.

சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
Tags:    

Similar News