ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: சகேயு வீட்டுக்கு வந்த இயேசு

Published On 2020-03-18 03:39 GMT   |   Update On 2020-03-18 03:39 GMT
தேவ பிள்ளைகளே நாமும் நம் பாவம் நீங்கவும், சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழவும் இயேசுவை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் தங்குவதற்கு அழைப்போமா?
எரிகோ பட்டணத்தில் சகேயு என்னும் பேர் கொண்ட மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் மக்களிடம் வரி வசூலிக்கும் வேலை செய்தவன். இவனுக்கு எல்லாம் நிறைவாய் இருந்தது. ஆனால் அவன் சொந்த நாட்டு மக்களே அவனை வெறுத்தனர். மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்ததே அதற்கு காரணம்.இந்த சூழ்நிலையில் தான் இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்தார். இயேசு வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அவரை காண்பதற்காக மக்கள் கூட்டம் கடல்போல் திரண்டது. இதை கேள்விப்பட்ட சகேயுவும், இயேசு குருடர், செவிடர், முடவர், குஷ்டரோகி யாவரையும் தகமாக்கியிருக்கிறார். மரித்தோரையும் உயிரோடு எழுப்பியிருக்கிறார். இப்படிப்பட்ட பரிசுத்த தேவ குமாரனை எப்படியாவது காண வேண்டுமென்று மிகுந்த ஆசையோடும், ஆவலோடும் காணப்பட்டார். ஆனால் சகேயு குள்ளனாயிருந்தபடியால், அங்கிருந்த மக்கள் கூட்டத்தில் இயேசுவை காணமுடியவில்லை. இருப்பினும் அவரை எப்படியாவது கண்டுகொள்ள வேண்டும் என்று நினைத்து, அருகிலிருந்த காட்டத்தி மரத்தில் ஏறி அவரை கண்டுகொண்டான்.

இயேசு அந்த மரத்தின் கீழ் வந்தபோது, சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். சகேயு உடனே கீழே இறங்கி மிகுந்த சந்தோஷமாய் இயேசுவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றான். அப்போது சகேயு இயேசுவிடம், என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன், ஒருவரிடத்தில் அதிகமாய் எதையாகிலும் பெற்றிருந்தால் அதை 4 மடங்காய் திருப்பி தருகிறேன் என்றான். அதற்கு இயேசு அவனிடம் இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்றார். இயேசு சகேயுவின் வீட்டிற்கு வந்ததும், பாவம் போனது, இரட்சிப்பு வந்தது, தெய்வீக சமாதானம் வீட்டை நிறைத்தது என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரம், 20-ம் வசனத்தில், -இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன், ஒருவன் என் (இயேசு) சத்தத்தை கேட்டு கதவை திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான்என்று சொல்லப்பட்டுள்ளது.

எனவே தேவ பிள்ளைகளே நாமும் நம் பாவம் நீங்கவும், சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழவும் இயேசுவை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் தங்குவதற்கு அழைப்போமா?

சகோதரி. ரூத்பிமோராஜ்,

கே.ஜி. கார்டன், திருப்பூர்.
Tags:    

Similar News