ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: மேன்மையான வாழ்வு

Published On 2020-03-16 03:49 GMT   |   Update On 2020-03-16 03:49 GMT
கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும்.
நமக்காக தன் வாழ்வையே ஒப்புக்கொடுத்து கல்வாரி சிலுவையில் தன் உயிரை விட்ட இயேசுவின் பாடுகளை குறித்து இந்த லெந்து நாட்களில் தியானித்து வருகிறோம். தன் வாழ்வை எப்படி நமக்காக அர்ப்பணித்தார் என்று பார்த்தால் இந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து பல்வேறு க‌‌ஷ்டங்கள் அனுபவித்து கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தன்னையே சிலுவையில் ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து மேன்மையான ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்.

இப்படி நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்த இந்த சிலுவையின் ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெற்றுக்கொள்வது? என்பதை வேதாகமத்தில் மத்தேயு 10:38-ல் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இந்த சிலுவையை பின்பற்றுவது? என்று சற்று தியானிப்போம்.

அநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர். நன்றாக வேதம் வாசிக்கின்றனர். கோவிலுக்கு சென்று ஆராதனை செய்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்க்கையில் தேவ ஆசீர்வாதங்கள் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசம் இருந்தாலும் சரியான அனுதினமும் தேவனுக்கென்று அர்ப்பணிப்பு இல்லாமல் பழைய மனிதனாகவே ஜென்ம சுபாவத்திலே உள்ளனர். இதனால் கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்காமலேயே உள்ளது.

கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும். அவர் நமக்காக சிலுவையில் அறையப்பட்ட பாடுகளை அனுபவித்ததை நினைவுகூர்ந்து நாமும் சிலுவையை பின்பற்றி தேவசாயலாக மாற வேண்டும்.

இப்படி நம் வாழ்க்கையில் பின்பற்றி நடந்தால் தேவ ஆசீர்வாதங்கள் பெற்று மேன்மையான வாழ்க்கையை நமக்கு தர தேவன் வல்லமையுள்ளவராக இருக்கார்.

சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
Tags:    

Similar News