டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை அணிக்கு 123 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்
- திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக மோகித் ஹரிஹரன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்த்தார்
- மதுரை பாந்தர்ஸ் தரப்பில் சன்னி சந்து 4 ஓவர்கள் வீசி, 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. துவக்க வீரர் விஷால் வைத்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் ஹரி நிஷாந்த் 24 ரன்களும், மணி பாரதி 18 ரன்களும் சேர்த்தனர். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. மறுமுனையில் மோகித் ஹரிஹரன் மட்டும் சற்று தாக்குப்பிடித்து ஆடியதால், அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது.
மோகித் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 சேர்த்தது.
மதுரை பாந்தர்ஸ் தரப்பில் சன்னி சந்து 4 ஓவர்கள் வீசி, 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.