மகளிர் கிரிக்கெட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்திய அணி
- ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக காஞ்சனா 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷவாலி வர்மா-மந்தானா ஆடினர். இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பான முறையில் எதிர் கொண்டு ரன்களை குவித்தனர்.
25.4 ஓவரில் இந்திய அணி விக்கெட் ஏதும் விட்டுக் கொடுக்காமல் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 7-ந் தேதி நடக்கிறது.