கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் போராட்டம் வீணானது - 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் திரில் வெற்றி

Published On 2023-08-24 18:23 GMT   |   Update On 2023-08-24 18:23 GMT
  • டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய பாகிஸ்தான் கடைசி ஓவரில் 302 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.

அம்பாந்தோட்டை:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 151 ரன்கள் குவித்தார். இப்ராகிம் சட்ரன் 80 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 91 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷதாப் கான் 35 பந்தில் 48 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

இறுதியில், பாகிஸ்தான் 49.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷதாப் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News