கிரிக்கெட்

பும்ரா பந்து வீச்சில் சிதறிய இங்கிலாந்து.. 253 ரன்னில் ஆல் அவுட்

Published On 2024-02-03 11:03 GMT   |   Update On 2024-02-03 11:03 GMT
  • இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக சாக் கிராலி 76 ரன்கள் எடுத்தார்.
  • இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

விசாகப்பட்டினம்:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டனர். இதனால் ரோகித், சுழற்பந்து வீச்சை பந்து வீச அழைத்தார். அதன்படி விக்கெட்டும் கிடைத்தது. பென் டக்கெட் 21 ரன்னில் அவுட் ஆனார். முதல் டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போப் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற விக்கெட் ஆனார்.

அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ரூட் 5, பேர்ஸ்டோவ் 25, போக்ஸ் 6, ரெஹன் 6, டாம் ஹார்ட்லி 21 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அணிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 47 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டும் குல்தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News