கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் உணவு இடைவேளை- 2 விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலியா

Published On 2023-03-09 06:05 GMT   |   Update On 2023-03-09 06:05 GMT
  • உமேஷ் யாதவ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் பரத் தவற விட்டார்.
  • 61 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 2-வது விக்கெட்டை இழந்தது.

அகமதாபாத்:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முகமது சிராஜுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த டெஸ்டில் ஆடிய வீரர்களே இடம் பெற்றனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் சுமித் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். டிரெவிஸ் ஹெட்டும், உஸ்மான் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களம் இறக்கினார்கள்.

முகமது ஷமியும், உமேஷ் யாதவும் தொடக்கத்தில் பந்து வீசினார்கள். ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடினார்கள். சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் பரத் தவற விட்டார். தொடர்ந்து ஆடிய ஹெட் தமிழக வீரர் அஸ்வின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

61 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 2-வது விக்கெட்டை இழந்தது. மார்னஸ் லாபுசேன் 3 எடுத்திருந்த நிலையில் முகமது சமி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து கவாஜா - ஸ்மித் ஜோடி நிதானமாக ஆடி வருகின்றனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், சமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Tags:    

Similar News