கிரிக்கெட்

சேப்பாக்கத்தில் 22-ந் தேதி ஒருநாள் போட்டி: இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் இன்று மாலை சென்னை வருகை

Published On 2023-03-20 08:33 GMT   |   Update On 2023-03-20 08:33 GMT
  • இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
  • 4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மகிவும் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

சென்னை:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

3 ஒருநாள் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் இன்று மாலை சென்னை வருகிறார்கள். இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.

பின்னர் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணி வீரர்களும் நாளை பயிற்சி பெறுகிறார்கள்.

சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

4 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மகிவும் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News