நானும் மதுரைக்காரன்தான்... இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லாதது - விஷால்
- கடந்த 2006-ல் திமிரு படப்பிடிப்புக்காக நான் மதுரை வந்தேன்.
- நம்மையும், நாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் மண்டபத்தில் இன்று நடிகர் விஷால் மக்கள் நல இயக்க செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த விஷால் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட செயலாளரான எனது தம்பியின் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். மதுரைக்கு வந்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு செல்ல முடியும். அப்படி சென்றால் எனது தாய் வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்கள். மேலும் எனது தாய் மீனாட்சி அம்மனுக்கு சாற்றுவதற்காக புடவை எடுத்துக்கொடுத்து அனுப்பி வைத்தார்.
கடந்த 2006-ல் திமிரு படப்பிடிப்புக்காக நான் மதுரை வந்தேன். தற்போது 19 ஆண்டுகள் கழித்து மதுரைக்கு வந்திருக்கிறேன். மீனாட்சி அம்மனை மனதார மனதார வேண்டிக் கொண்டேன்.
நடிகர் விஷால் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட பொதுமக்கள்
நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு நான் காரணம் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து கோர்ட்டுக்கு சென்றதால் 3 ஆண்டுகள் தாமதம் ஆகி விட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டிடம் பெரியதாக வந்துவிடும்.
மதுரை மக்கள் என்னை விட்டு விட மாட்டார்கள். நானும் மதுரைக்காரன்தான். இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லாதது, இதை தவிர்த்து இருக்கலாம். நம்மையும், நாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் இருநாடுகளுக்கு இடையே போர் என்பதே தேவையில்லை. மதுரை மக்கள் இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். ஒன்று பாசம், மற்றொன்று உணவு. நூறு ஆண்டுகள் கழித்து வந்தாலும் அதே பாசமும், சிரிப்பும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.