அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் - தளபதி விஜய் ஸ்டைலில் சொன்ன குட்டி ஸ்டோரி
- அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
- இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில், இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. இன்று சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற அட்லீ மேடையில் பேசும்போது, மிகவும் எமோஷனலாக உணர்வதாக கூறினார்.
மேலும் அவர் சத்தியபாமா குழுமத்தின் உரிமையாளரான ஜேபி ஆர் ஐ பற்றி மிகவும் பெருமையாக பேசினார். "அவருடைய வாழ்க்கையில் இருந்து தான் பிகில் பட ராயப்பன் கதாப்பாத்திரம் உருவானது. என் அப்பா - அம்மா என்ன இயக்குனர் ஆகும் வரை பார்த்துக்கொண்டார்கள் என்றால், அதிலிருந்து இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு என் மனைவிதான் காரணம். நான் ஒரு நல்ல மனுஷனா மாறியதற்கு முக்கிய காரணம் என் மகன்.
இதுதவிர என் அண்ணன் தம்பி பெயரை சொன்னால் தெரிச்சுடுவீங்க. என்னோட அண்ணன் தளபதி விஜய்" என அட்லீ கூறியதும் அந்த அரங்கமே அதிர்ந்தது. மேலும் தளபதி ஸ்டைலில் ஒரு குட்டி ஸ்டோரி கூறினார். அதில் கோயிலில் உள்ள படிக்கட்டிற்கும் கருவறையில் உள்ள தெய்வ சிலைக்கும் ஒப்பீட்டு ஒரு கதையை கூறினார். மேலும் " அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் மூலம் நம் திரையுலகம் பெருமைப்படும். அதற்கு நான் நம்பிக்கை கொடுக்கிறேன். மேலும் இதுவரை பார்த்திடாத அளவு பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது" என கூறியுள்ளார்.