சினிமா
அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் - ஜெனிலியா திட்டவட்டம்
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ஜெனிலியா, அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கும் காதலித்து 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். கடைசியாக அவரது நடிப்பில் தேரே நால் லவ் ஹோ இந்தி படம் வெளிவந்தது.
இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி உள்ளார். இதுகுறித்து ஜெனிலியா அளித்துள்ள பேட்டியில், “திருமணத்துக்கு பிறகு கணவருடன் நேரத்தை செலவிட முடிவு செய்ததால் நடிக்கவில்லை. அதன்பிறகு குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பும் வந்தது. வீட்டில் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு படப்பிடிப்புக்கு சென்றால் கவனத்தை நடிப்பில் முழுமையாக செலுத்த முடியாது. அதனால்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்து விட்டேன். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வருகிறேன். அதிக பட வாய்ப்புகளும் வருகின்றன. அம்மாவாக நடிக்க மாட்டேன்” என்றார்.