சினிமா
கொரோனாவால் ராஜமவுலி படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்
கொரோனா ஊரடங்கு காரணமாக ராஜமவுலியின் இரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.
மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 2021-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.